கனடாவின் பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமையானது, எமது கூட்டு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தருணம் என்று கனடா நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நினைவுத்தூபி இலங்கையில் அரசாங்கத்தால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வலிமையையும், அவர்கள் மீண்டெழுந்த தன்மையையும் போற்றுகிறது. இந்த நினைவுத்தூபி உருவாகுவதற்கு அவர்களின் அர்ப்பணிப்பே காரணம்.
மேலும், கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன், கனடா தமிழர் தேசியப் பேரவை, பிரம்டன் தமிழ் சங்கம் ஆகியோருக்கும், எமது கதைகள் ஒருபோதும் மறக்கப்படாமல் இருக்கப் போராடியவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
தொடர்ந்தும் நீதிக்காகக் குரல் கொடுக்கும் அதே வேளையில், நாம் ஐக்கியப்பட்டவர்களாகவும், வலிமையானவர்களாகவும் இருப்போம் என்றும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.