வடபகுதியில் இம்முறை தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது, இவ்வாறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்தார். அவர், வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் இதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டார்.
சிறிநேசன், நேற்று (24) மட்டக்களப்பு குருமண்வெளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, சிறிநேசன் மேலும் கூறியதாவது:
“கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிட்டாலும், பிரதேச சபைகளை முற்றாக கைப்பற்றிய அறுதிப் பெரும்பான்மை எமக்குக் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தென்னிலங்கை சார்ந்த கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), மற்றும் எமது கட்சியுடன் உடன்படாத சில கட்சிகளுடன் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் பயனாக, இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவதைவிட, பிரிந்து போட்டியிட்டு அதிகமான ஆசனங்களை கைப்பற்றிய பின்னர், தமிழ்த் தேசிய உணர்வுகள் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைவதற்கு முன் அவர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.”
அவர் மேலும் கூறியதாவது:
“இணைந்து போட்டியிடுவதன் மூலம் சில வேளைகளில் உள்ளுராட்சி மன்றத்தில் வரக்கூடிய ஆசனங்களைவிட குறைவான ஆசனங்களை பெறக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. எமது கட்சி பாரம்பரியமான கட்சி என்ற அடிப்படையில் கருத்து சுதந்திரம் இருக்கின்றது.
கடந்த காலத்தில் எடுத்த முடிவுகளுக்கு பலவிதமான உடன்பாடுகள் இல்லாததால், பொது வேட்பாளர் பற்றிய விடயத்தில் அவ்வாறு உடன்பாடு இல்லை.
இம்முறை, வடபகுதியில் தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது. இதன் காரணம், வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் சில முக்கியமான நபர்கள் அதிருப்தியால் கட்சியை விட்டு வெளியேறியது. இதனால் வாக்கு சிதறல்கள் மற்றும் சிதைவுகள் ஏற்பட்டு, வடபகுதியில் கட்சி இழப்புகளை சந்தித்து உள்ளது.
இந்த சிதைவுகள் காரணமாக, மத்திய குழு கூட்டங்களில் வாத மற்றும் பிரதிவாதங்கள் எழுந்து உள்ளது,” எனவும் சிறிநேசன் கூறினார்.