வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமே திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) தெரிவித்துள்ளது.
விமான எதிர்ப்பு பயிற்சிகளிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானமே மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் எரன்ட கீகனகே (Eranda Geeganage) தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் ஆளில்லா விமானம் (Target drone) ) என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 40 கிலோ எடையுள்ள ஆளில்லா விமானம்.
இதுபோன்ற விமானங்கள் இந்திய விமானப்படையின் பயிற்சி அமர்வுகளில் இலக்குகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், இந்த விமானம் சேதமடையவில்லை என்றும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த ஆளில்லா விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆளில்லா விமானம் இலங்கையின் முப்படைகளிற்கு சொந்தமானதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஆளில்லா விமானம் பயிற்சியின் போது தவறுதலாக இலங்கையின் கடற்பரப்பில் தரையிறங்கியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விமானத்தில் வெடிபொருட்கள் இருக்கவில்லை, இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2022இல் இவ்வாறான ஆளில்லா விமானமொன்று ஓடிசாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்