முல்லைத்தீவு மாவட்டத்தில், குறிப்பாக செம்மலை மற்றும் நாயாறு பகுதிகளில் தனியார் நிறுவனமொன்று இல்மனைட் அகழ்வு மேற்கொள்ள முயற்சித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே கொக்கிளாய் பகுதியில் நடந்த இதே போன்ற அகழ்வு, மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்ததால், மக்கள் தங்கள் நிலங்களை இழந்து, கடலரிப்பு ஆபத்துக்கு உள்ளாகியிருந்தனர்.

தற்போதைய முயற்சியும் இதே போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, தனியார் நிறுவனத்தினர் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறினர்.
நாடாளுமன்ற உறுப்பினர், மீனவ ஒத்துழைப்பு இயக்கம், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற போராட்டங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் நடைபெற்றும் இதற்குரிய ஒரு முடிவு அரசினால் எடுக்கப்படாமல் இருப்பது மக்களால் ஒரு கவலைக்குரிய விடயமாகவே கருதப்படுகின்றது.