மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் யூ.எல். நஸீர்தீன் அறிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் அனுசரணையுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் பரப்பளவில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலுடன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதால், அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பாரிய வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று வைத்தியர் யூ.எல். நஸீர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை பிரதேசத்துக்குட்பட்ட புதிய காத்தான்குடி உட்பட பல்வேறு இடங்களில், 15 பிரிவுகளாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிக்கப்பட்டு, தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பருவமழை ஆரம்பித்திருப்பதால், மாவட்டத்தில் மேலும் பெருமளவில் டெங்கு பரவுவதைப்பற்றி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் நஸீர்தீன் அதிக கவலை தெரிவித்துள்ளார்.