தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG-T) உடன் இணைந்து, பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாட்டில், தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா – 2026, எதிர்வரும் தை மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

தமிழர்களின் செழுமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில், பிரித்தானிய தமிழர் பேரவை நீண்ட காலமாகப் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான தைப் பொங்கலை “தமிழர் திருநாளாக” உலகளவில் அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான இந்த நிகழ்வில், பிரித்தானிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த விழா, தமிழர் அடையாளம், மரபு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் அரசியல் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மேடையாக அமைந்திருந்தது.

