இலங்கையில் தற்போது நிலவி வரும் குளிர் காலநிலையுடன் பல்வேறு வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்கள் குறிப்பாக இளம் சிறுவர்களிடையே அதிகமாகப் பரவி வருவதாக கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே தெரிவித்துள்ளார். குளிர் மற்றும் வறண்ட வானிலை நிலவும் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகிறது என்றும், இதனால் பிரதானமாக மேல் சுவாசக் குழாய் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, கடுமையான தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், நாடு முழுவதும் தற்போது காற்றின் தர அளவு குறைந்த நிலையில் காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையகம் (CEA) தெரிவித்துள்ளது. இருப்பினும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்த நிலைமை மேம்பட்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக CEA செய்தித் தொடர்பாளர் அஜித் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
