யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை (14) பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது.
நிகழ்வில், படுகொலையில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு துயரஞ்சலியை பகிர்ந்தனர்.
செஞ்சோலைப் படுகொலை 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சில் இடம்பெற்றது. இதில் 54 மாணவிகளும், 7 பணியாளர்களும் உயிரிழந்ததுடன், 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடுமையாக காயமடைந்தனர்.
இந்த சம்பவம், இலங்கை உள்நாட்டுப் போரின் போது பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
