வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு, வடக்கு–கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாநாடு நடைபெற்ற மண்டபத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்றாடப் பாவனைப் பொருட்கள், அவர்கள் விரும்பிச் சேகரித்த பொருட்கள் மற்றும் அவர்களின் நினைவாக இன்றளவும் உறவினர்களால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏனையவர்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த பொருட்களை பார்வையிட்டதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வலியையும், அவர்களது நீதிக்கான நீண்டகாலப் போராட்டத்தையும் நினைவுகூர்ந்தனர்.

