Monday, January 26

திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பதாகை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிடப்பட்டுள்ள பதாகை, அந்த பகுதியில் தொல்லியல் பரப்புக்குள் உள்ள பகுதிகளை அவதானிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் மக்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, குறிப்பாக இப்பகுதியில் எவ்வளவு நிலப்பிரதேசம் தொல்லியல் வலயத்துக்கு உட்பட்டுள்ளது? மேலும், இது குறித்து எந்த வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

முக்கியமாக, அப்பகுதியில் ஒரு புத்த விகாரை அமைக்கப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியின் மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேலும், கடந்த 28.12.2024 அன்று குச்சவெளி பகுதியில் அதே முறையில் பதாகை நடப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1ஆம் திகதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம், தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக உள்ள சர்ச்சைகளை மேலும் அதிகரிக்க செய்கின்றது, மற்றும் அப்பகுதியில் அரசு மற்றும் பொதுமக்கள் இடையே உள்ள இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்ற கவலைகளை உருவாக்கியுள்ளது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version