கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த 16 வயது சிறுமி ஒருவர், அதே பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற அந்த மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி குறித்த கட்டிடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மே மாதம் 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பாடசாலை ஆசிரியர் ஒருவரும், மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவருமே தமது மகளின் மரணத்திற்கு காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
இதன் விளைவாக, மாணவியின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி, கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலைக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த சிறுமி கல்வி கற்ற தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது குறித்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.