தமிழர் தாயக கடற்பரப்பில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளின் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல், தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் டக்ளஸ் போல் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இன்று காலை 10.30 மணிமுதல் மாலை 1.30 மணிவரை, யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கலந்துரையாடலின் போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவசியமான பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய செயற்பொறிமுறைகள் குறித்து பரந்தளவில் விவாதிக்கப்பட்டது.
மேலும், கடற்றொழிலாளர் அமைப்புகளை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த முறையில் செயற்படுவது தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
