யாழ்ப்பாணம் – நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தி, “நீதிக்கான சாட்சி” எனப் பெயரிடப்பட்ட நூதன போராட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அரசியல் கைதிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் மெழுகுவர்த்தி போல தேய்வடைந்து வருகின்ற நிலையில், அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மௌனப் போராட்ட வடிவில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், மெழுகுவர்த்திகள் ஏந்தப்பட்டு நீதியை வலியுறுத்தும் வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான சிறைவாசம் மனித உரிமைகளின் கடும் மீறலாகும் எனவும், இதற்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அரசியல் கைதிகளின் விடுதலை உறுதி செய்யப்படும் வரை இவ்வாறான போராட்டங்கள் தொடரும் என்றும், நீதிக்கான தங்கள் போராட்டம் ஓயாது என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
